மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 43
துருபத மன்னனின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் துருபத மன்னனின் அரண்மனைக்கு விருந்தினராக வந்தார்கள். அரண்மனைக்கு வந்த பாண்டவர்கள் ராஜ மாளிகையின் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவர்கள் போன்று செயல்பட்டனர். ராஜரீதியுடன் அவர்கள் உணவு உண்பதையும் அவர்களின் செயல்கள் அனைத்தும் ராஜா ரீதியிலேயே இருப்பதையும் துருபத மன்னன் கவனித்தான். அரண்மனையில் இருந்த வெவ்வேறு மண்டபங்களில் உள்ள இடங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. யுத்த தளவாடங்கள் நிறைந்திருந்த மண்டபமே விருந்தினராக வந்திருந்த பாண்டவர்களின் கவனத்தில் பெரிதும் கவர்ந்தது. இவை அனைத்தையும் கூர்மையாக கவனித்து வந்த துருபத மன்னன் வந்தவர்கள் பாண்டவர்களே என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தனது மகன் திருஷ்டத்யும்னன் கூறியது உண்மை தான் என்று எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைந்து பாண்டவர்களிடம் சென்று தங்களுடைய வரலாற்றையும் நீங்கள் யார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டினான்.

பாண்டவர்கள் தங்களது வரலாற்றை உள்ளது உள்ளபடி எடுத்து விளக்கினார். அதைக் கேட்ட துருபதன் அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். வாரணவாதத்திற்கு போனது முதற்கொண்டு அவர்கள் அடைந்த அனுபவங்கள் அனைத்தையும் முழு கவனத்துடன் துருபதன் கேட்டான். அர்ஜூனனுக்கும் திரௌபதிக்கும் விவாகம் அதிவிரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று துருபத மன்னன் கூறினான். ஆனால் அதற்கு நேர்மாறான மற்றொரு கருத்தை யுதிஷ்டிரன் தெரிவித்தான். பாண்டவர்களாகிய நாங்கள் ஐவரும் திரௌபதியை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதைக் கேட்ட மன்னன் திகைத்து போனான். இது எங்குமே கேள்விப்படாத ஒன்றாக உள்ளது எங்கும் கேள்விப்படாத போக்காக இருக்கிறது தர்மம் இதற்கு இடம் தராது. ஐதீகம் இதற்கு மாறானது. ஆடவன் ஒருவன் பல தடவை மணந்து கொள்ளலாம். சேர்ந்தார் போல் அவனுக்கு மனைவிமார்கள் பலர் இருக்கலாம். ஆனால் பெண் ஒருத்தி ஒரு தடவை தான் மணந்து கொள்கிறாள். அவளுக்கு கணவன் ஒருவனே. இக்கோட்பாடுகளை கூறி பாண்டவ சகோதரர்கள் கொண்டிருந்த கருத்தை துருபத மன்னன் முற்றிலும் நிராகரித்தான்.

அப்பொழுது திடீரென்று வியாச பகவான் அங்கு பிரசன்னமானார். அவரது வரவை குறித்து இரு தரப்பினரும் அகமகிழ்வு கொண்டனர். தக்க முறையில் அவர் பக்திபூர்வமாக வரவேற்கப்பட்டார். பிறகு தனக்கு நேர்ந்த நெருக்கடியை துருபதன் வியாசரிடம் தெரிவித்தான். வியாசர் முன்பு பாண்டவர்களிடம் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் துருபதனிடம் கூறினார். அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டது என்று விளக்கிக் கூறினார். துருபதன் அறிவு களஞ்சியமாகிய வியாசரிடம் அளவு கடந்த விசுவாசம் வைத்திருந்தான். அனைத்தும் இறைவனது திட்டம் என்று எண்ணி அவன் திருமணத்திற்கு சம்மதித்து முழுமனதுடன் திரௌபதியை பாண்டவர்கள் ஐவருக்கும் கன்னிகாதானம் செய்து வைத்தான். திரௌபதி வியாசர் கூறியபடி நடந்து கொண்டு தனது புனிதத்தை காப்பாற்றி வந்தாள்.