மகாபாரதம் | 10 சௌப்தீக பருவம் | பகுதி -1
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள் படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் துரியோதனைக் கண்டு வேதனைப்பட்டனர். துரியோதனன் வாழ்ந்திருந்த காலத்தில் வல்லமை மிக்க பேரரசனாக இருந்தான். சிற்றரசர்களும் மந்திரிகளும் அவனுடைய ஆணையை நிறைவேற்ற காத்திருந்தனர். அல்லும் பகலும் அவனுக்கு பணிபுரிய பாணியாளர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது துரியோதனன் கவனிப்பார் யாரும் இல்லாமல் அடிபட்டு வெறும் தரையில் தன்னந்தனியாக படுத்து தவித்துக் கொண்டிருந்தான். தொடைகள் முறிந்ததால் நகர முடியாதமல் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான் துரியோதனன்.

தன் வேந்தனின் நிலையை பார்த்த அஸ்வத்தாமன் வருந்தினான். விதியை வெல்ல முடியவில்லையே என்று அஸ்வத்தாமனிடம் வருந்தினான் துரியோதனன். அஸ்வத்தாமனுக்கு கோபம் மூண்டது. இல்லாத பொய்யை சொல்லி பாண்டவர்கள் என் தந்தையை தோற்கடித்து அவரைக் கொன்று விட்டனர். அடாத முறையை கையாண்டு உங்களை இந்நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். இப்பொழுது நான் சபதம் மேற்கொள்கிறேன். பாண்டவர்களே நான் கொல்வேன். அவர்களை ஒழித்துத் தள்ளும் வரை நான் ஓய மாட்டேன் என்று அசுவதாமன் துரியோதனனிடம் கூறினான். அஸ்வத்தாமனின் சபதம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது அஸ்வத்தாமன் மீது நீர் தெளித்து அவனை சேனாதிபதி ஆக்கினான் துரியோதனன். இப்போது கௌரவர்களிடம் சேனே ஒன்றும் இல்லை. கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பாண்டவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அருகில் சென்று நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் திரௌபதியையும் கொல்ல வேண்டும் என அஸ்வத்தாமன் கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை. கிருபரின் எதிர்ப்பை மீறி அன்று இரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் பாசறைக்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவன் திரௌபதியின் புதல்வர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று எண்ணி தலையை கொய்து கொன்றான். தன் தந்தையை கொன்ற திருஷ்டத்துய்மனை சித்ரவதை செய்து கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணரின் அறிவுறைப்படி அங்கு இல்லை.

அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். அஸ்வத்தாமன் தான் கொய்த தலைகளை துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு கொண்டு சென்று காண்பித்தான். அதை பார்த்த துரியோதனன் மூடனே இவர்களின் இளகிய முகத்தை பார்த்துமா உனக்கு தெரியவில்லை இவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று என்ன காரியம் செய்தாய் நீ என்று திட்டி விட்டு இறுதிவரை பாண்டவர்களை ஒழிக்க முடியவில்லையே என்று கூறி தன் விழிகளை மூடினான். துரியோதனன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை. மரணித்த ஒவ்வொரு வீரனின் இறப்பிற்கு பலரின் பூர்வ ஜென்ம கதை, சாபங்கள், பாவங்கள், புண்ணியங்கள், சூழ்ச்சி, கடன் என அனைத்தும் இருந்தது. ஆயிரம் ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு சடலங்களை மலையாக குவித்து குருதியை ஆராய் பெருக்கெடுக்க செய்த குருக்ஷேத்திர போர் முடிவிற்கு வந்தது.