மகாபாரதம் | 17 மகாபிரஸ்தானிக பருவம் | பகுதி -3
யுதிஷ்டிரன் மேரு மலையின் உச்சியை அடைந்தான். அவனுடன் வந்த நாயும் அவன் பின்னே வந்து சேர்ந்தது. அப்போது இந்திரன் தன்னுடைய விமானத்தில் யுதிஷ்டிரனை அழைத்து செல்ல யுதிஷ்டிரன் முன்னிலையில் வந்து இறங்கினான். இந்திரன் யுதிஷ்டிரனை பார்த்து தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். தாங்கள் விமானத்தில் ஏறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு யுதிஷ்டிரர் வழியில் வீழ்ந்து மடிந்து போன தன்னுடைய சகோதரர்களும் திரௌபதியும் என்ன கதியை அடைந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு சொர்க்கலோகம் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் அவர்கள் ஒவ்வொருவராக வீழ்ந்த போது நீ ஏன் அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் அவர்களை திரும்பி பார்த்திருந்தால் நானும் வீழ்ந்திருப்பேன். மேலான லட்சியத்தை நாடிச் செல்லும் ஒருவன் பந்த பாசத்தை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்தினாலோ திரும்பிப் பார்ப்பானாகில் அவன் மேற்கொண்டு முன்னேற்றம் அடையமாட்டான். இது வாழ்வைப் பற்றிய கோட்பாடு ஆகும். மேலான சொர்க்கத்திற்கு செல்லும் லட்சியத்தை நாடிச் சென்று கொண்டிருந்தேன். ஆகையால் திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறினான்.  

உனது சகோதரர்களும் திரௌபதியும் வீழ்ந்த போது பீமனிடம் அதற்கான சரியான காரணத்தை சொன்னாய். அந்த காரணங்களை முன்னிட்டு அவர்கள் உடலோடு சொர்க்கத்திற்குப் வர தகுதியற்றவர்கள் ஆனார்கள். சூட்சும உடலோடு அவர்கள் ஏற்கனவே சொர்க்கத்திற்கு வந்திருக்கின்றார்கள். நீ அறநெறி பிறழாது இருந்த காரணத்தினால் உடலுடன் சொர்க்கம் வர தகுதி உடையவனாக இருக்கிறாய். ஆகையால் நீ விமானத்தில் ஏறுவாயாக என்று இந்திரன் கூறினான். யுதிஷடிரன் விமானத்தில் ஏற முயன்ற பொழுது யுதிஷ்டிரனுடன் வந்த நாய் விமானத்தில் ஏற முயன்றது. அப்போது இந்திரன் இந்த நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று தடுத்தான். இதைப்பார்த்த யுதிஷ்டிரன் என்னை நம்பி இந்த நாய் வந்திருக்கின்றது. இதற்கு அனுமதி இல்லையென்றால் என்னை நம்பி வந்த இந்த நாயை புறக்கணித்துவிட்டு நான் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் இந்த நாயோடு இந்த உலகத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது ஏற்கனவே அங்கு சென்றுள்ள உன் சகோதரர்களுடன் சொர்க்கத்தில் இருக்க விரும்புகின்றாயா என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் அனைத்து விலங்குகளையும் தெய்வீகம் வாய்ந்தவைகளாகவே தான் கருதுகிறேன். என்னை நம்பி வந்த நாயை புறக்கணிப்பது தர்மமாகாது. தர்மத்தின் படி நடக்க என்னுடன் பிறந்தவர்களையும் சொர்கத்தையும் துறக்க நான் தயாராக இருக்கின்றேன். என்னை நம்பி வந்த நாயை விட்டு வரமாட்டேன் என்று உறுதியுடன் கூறினான்.

யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியதும் நாய் எழில் நிறைந்த தர்மதேவதையாக மாறியது. மகனே உன்னை நான் பெரிதும் பாராட்டுகிறேன் முன்பு ஒரு தடவை நச்சுப்பொய்கை கரையில் உன்னை நான் சோதித்தேன். சொந்த சகோதரர்களுக்கும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்து கொண்டாய். இப்பொழுது விலங்குகள் மேல் வைத்திருக்கும் கருணையை நான் ஆராய்ந்தேன். உன்னுடைய பரந்த மனப்பான்மையை முற்றிலும் நான் பாராட்டுகின்றேன். நீ இந்திரனோடும் என்னோடும் சொர்க்கலோகம் வருவாயாக இந்த உடலோடு வரும் தகுதி உனக்கு உண்டு என்று விமானத்திற்குள் வரவேற்றார். இந்த அதிசயத்தை காண விண்ணவர்கள் அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்களை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.  

மகாபிரஸ்தானிக பருவம் முற்றியது அடுத்து சுவர்க்க ஆரோஹன பருவம்.