மகாபாரதம் 18 | சுவர்க்க ஆரோஹன பருவம் | பகுதி -2
யுதிஷ்டிரன் தன் போக்கில் பேச்சை முடித்தவுடன் தர்மராஜன் யுதிஷ்டிரன் முன்னிலையில் தோன்றினார். யுதிஷ்டிரனுடைய தெய்விக தந்தையாகிய தர்மராஜார் வேண்டுமென்றே மூன்றாவது தடவையாக யுதிஷ்டிரனை பரிசோதனை செய்திருந்தார். அதிலும் யுதிஷ்டிரன் வெற்றி பெற்றான். தர்மராஜன் தோன்றியதும் அங்கு இருந்த காட்சி திடீரென்று மறைந்து நரகம் சொர்க்கமாக மாறியது. இது யுதிஷ்டிரனுக்காக வேண்டுமென்றே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வெறும் தோற்றம் ஆகும் தர்ம மார்க்கத்தில் இருந்து இம்மியளவும் பிசகாது இருந்த யுதிஷ்டிரனுக்கு இந்த கொடிய காட்சியானது சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே காண்பிக்கப்பட்டது. நரக வேதனை என்ன என்பதை அறியாது இருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் பூர்த்தியடையாது. தான் வேண்டுமென்று செய்யாமலேயே துரோணருக்கு போர்க்களத்தில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணி துரோணர் இறப்பதற்கு யுதிஷ்டிரனும் ஒரு காரணமாக இருந்தான். அறியாமல் செய்த குற்றத்திற்கு சிறிது நேரம் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற சிறு தண்டனை அவனுக்கு அளிக்கப்பட்டது.

ஒருவன் எவ்வளவு தான் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தாலும் அவர்கள் சிறிதேனும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். இந்த வகையில் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி யுதிஷ்டிரனும் சிறிது நேரம் தண்டனையை அனுபவித்தார்கள். சிறிது நேர நரக தண்டனை முடிந்ததும் இப்போது அவர்கள் இருந்த இடம் சொர்க்கமாக மாறி பேரின்பத்தில் வாழ்வார்கள். ஒருவன் எவ்வளவு தவறு செய்தாலும் அவன் சிறிது நன்மை செய்திருப்பான் அதன்படி துரியோதனன் செய்த சிறிது நன்மைக்காக சிறிது நேரம் சொர்கத்தில் வாழ்ந்தான். செய்த நன்மைக்கான பலன் சொர்க்கத்தில் முடிவடைந்ததும் அவன் இருந்த இடம் நரகமாக மாறியது. இப்போது அவன் செய்த தவறுக்கு நரகத்தில் அதற்கான தண்டனை அனுபவிப்பான்.

மண்ணுலகில் தர்மத்தை கடைபிடித்து தர்மன் என்று பெயர் பெற்ற யுதிஷ்டிரன் விண்ணகத்திலும் தர்மத்தை கடைபிடித்து தர்மராஜன் பெற்ற மகனாக விளங்கினார். யுதிஷ்டிரன் கடைபிடித்து வந்த தர்மத்தை சொர்க்கபதவியை காட்டியும் நரக வேதனை காட்டியும் அவனை கடைபிடிக்காமல் செய்ய இயலவில்லை. அனைத்து சோதனைகளிலும் அவன் வெற்றி பெற்று விண்ணுலகிலும் தர்மன் என்னும் பெயர் பெற்றான்.

யுதிஷ்டிரன் தேவலோகத்தில் இருந்த கங்கா நதியில் நீராடினான் அதன் விளைவாகத் விண்ணுலகிற்கு உரியவனான். அதன் பிறகு அவன் தனது சகோதரர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் உடன் பிறந்தவர்கள் திரௌபதியும் ஏற்கனவே விண்ணுலக வாசிகளான அவர்களோடு சேர்ந்த அவனது பேரானந்தம் பன்மடங்கு அதிகரித்தது. நெடுநாள் சொர்க்க பதவியை அனுபவித்தை பிறகு சிலர் பரம்பொருளில் இரண்டறக் கலந்தனர். வேறு சிலர் தங்கள் புண்ணிய கர்மாக்களை முடித்துக் கொள்ளுதல் பொருட்டு மீண்டும் மண்ணுலகில் பிறந்தனர்.

மகாபாரதம் முற்றியது.