மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 20
யுதிஷ்டிரனுடைய இருப்பிடத்திற்கு சென்றால் தங்களுக்கு மேலும் உணவு அளிப்பார்கள். அதிகமான உணவு சாப்பிட்ட அனுபவத்தைப் பெற்றபடியால் அங்கு உணவு அருந்த இயலாது. ஆகவே அனைவரும் ஆலோசனை செய்தார்கள். பிறகு பாண்டவர்களின் கண்ணுக்குத் தென்படாது அங்கிருந்து சென்று விடலாம் என்று துர்வாச மகரிஷியும் அவரது சீடர்களும் ஏகமனதாக முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். துர்வாச மகரிஷி திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் துர்வாச மகரிஷியை அழைத்து வருமாறு பீமனை அனுப்பி வைத்தான். பீமன் நதிக்கரையில் யாரும் இல்லாததை கண்டு யுதிஷ்டிரனிடம் கூறினான்.

கிருஷ்ணனுடைய கருணையால் திரௌபதி பெரும் சோதனையிலிருந்து விடுதலை பெற்றாள். பூரண யோகி ஒருவன் தன் பசியை போக்கிக் கொண்டால் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருடைய பசியையும் போக்க வல்லவனாகிறான் என்பது யோகசாத்திர தர்மத்தின் கோட்பாடாகும். அந்த கோட்பாட்டை கிருஷ்ணன் இங்கு கையாண்டான். துர்வாச மகரிஷியும் அவருடைய சிஷ்யர்களும் உணவு உண்ட அனுபவத்தை பெற்றனர். பாண்டவர்களும் துர்வாச மகரிஷியின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

பாண்டவர்கள் தங்கியிருக்கும் வனத்தில் தங்கியிருக்கும் சில பெண்கள் இருந்தபடியால் திரௌபதிக்கு துணையாக அவர்களை வைத்து விட்டு பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது சிந்து நாட்டு மன்னனாகிய ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். ஆனால் திரௌபதி தன்னை இன்னார் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவிசாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத்தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான்.

திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர் எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்க மயக்கம் உண்டாயிற்று. அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.