மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 22
மானை பிடிக்க முடியாமல் போனதால் தர்மத்திலிருந்து பிசகி விட்டோமே என்று வருத்தத்தில் பாண்டவ சகோதரர்கள் இருந்தனர். அப்போது பீமன் துச்சாதனன் சபையின் நடுவே திரௌபதியை இழுத்து வந்த போது நாம் அவனை கொன்றிருக்கவேண்டும் அந்த கடமையிலிருந்து நாம் நழுவியதே இந்த இந்த தர்மத்திலிருந்து பிசகியதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றான். அப்போது அர்ஜூனன் சபையில் கர்ணன் திரௌபதியை அவமானப்படுத்திய போது நான் செயலற்று இருந்தேன் அப்போதே அங்கு அவனை நான் கொன்று இருந்தால் இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது என்றான். சகாதேவன் சகுனி பகடை விளையாட்டில் வெற்றி பெற்றிருந்த பொழுது நான் அவனை கொன்றிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் போனது தான் காரணமாக இருக்கும் என்றான். சகோதரர்கள் கூறிய அனைத்தையும் யுதிஷ்டிரன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான். அனைவருக்கும் தாகம் ஏற்பட்டது. தங்கள் தாகத்தை தணிக்கும் பொருட்டு அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து தண்ணீர் கொஞ்சம் கொண்டு வரும்படி நகுலனிடம் அவன் கூறினார்

தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக ஆரம்பித்தபோது அசரீரி ஒன்று ஒலித்தது. இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன் பிறகு நீர் பருகலாம் என்றது அசரீரி. சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்தி விட்டு தண்ணீர் குடித்தான். சிறிது தண்ணீர் குடித்த உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல் என்றது. முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் கீழே வீழ்ந்தான்.

மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் யுதிஷ்டிரன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். தம்பிகளுக்கு என்ன ஆனது என்று பார்த்து விட்டு எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது ராட்சசர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார் என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே கீழே விழுந்தான்.