மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 23
தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் யுதிஷ்டிரர். நீர் இருக்கும் தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் நீர் அருந்த முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய யுதிஷ்டிரர் இந்த தண்ணீர் தடாகம் உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன் என்றார்.

கேள்வி – சூரியனை பிரகாசிக்கும் படி செய்வது எது?  

யுதிஷ்டிரன் பதில் – பரப்பிரத்தின் தெய்வீக சக்தி சூரியனை பிரகாசிக்கும் படி செய்கிறது

கேள்வி – மனிதன் மேலோன் ஆவது எப்போது?  

யுதிஷ்டிரன் பதில் – தவத்தின் வாயிலாக மனிதன் மேலோன் ஆகிறான்  

கேள்வி – மனிதன் எப்போது புத்திமான் ஆகின்றான்?  

யுதிஷ்டிரன் பதில் – ஏட்டுக்கல்வியினால் மனிதன் புத்திமான் ஆவதில்லை. சான்றோர் இணக்கத்தினாலே மனிதன் புத்திமான் ஆகின்றான்.  

கேள்வி – பிராமணன் யார்?  

யுதிஷ்டிரன் பதில் – எல்லோருடைய நலத்தின் பொருட்டு தன்னை ஒப்படைப்பவன் பிராமணன் ஆகிறான்.  

கேள்வி – க்ஷத்திரன் யார்?  

யுதிஷ்டிரன் பதில் – தர்மத்தை காக்கும் பொருட்டு தன் உயிரைக் கொடுப்பவன் க்ஷத்திரியன் ஆகின்றான்.  

கேள்வி – வேகம் வாய்ந்தது எது  

யுதிஷ்டிரன் பதில் – மனம்.  

கேள்வி – பயணம் போகிறவர்களுக்கு மிக மேலான கூட்டாளி யார்?  

யுதிஷ்டிரன் பதில் – கல்வி  

கேள்வி – எதை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்?  

யுதிஷ்டிரன் பதில் – ஆசையை துறப்பதால் மனிதன் பொருள் படைத்தவன் ஆகின்றான்.  

கேள்வி – அமைதி எங்கு உள்ளது?  

யுதிஷ்டிரன் பதில் – மனத்திருப்தியில்.  

கேள்வி – அதிசயங்களுள் அதிசயம் எது?  

யுதிஷ்டிரன் பதில் – கணக்கற்ற பேர் இடைவிடாமல் இறந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி இருந்தும் உயிர்வாழ்ந்து இருப்பவன் தான் மரணம் அடையாமல் இருக்க போவதாக எண்ணிக் கொள்கிறான். இதுவே அதிசயங்களுள் அதிசயம்  

இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் யுதிஷ்டிரர்.