மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 24
யுதிஷ்டிரனின் பதில்களால் மகிழ்ந்து போன அந்த குரல் இறுதியில் மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டது. நகுலனை எனக்குத் திருப்பிக் கொடுங்கள் என யுதிஷ்டிரர் வேண்டினார். யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன் அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் நகுலனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.

அதற்கு யுதிஷ்டிரன் போர் புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல. அதுமட்டுமில்லாமல் என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இருவரும் எனக்கு தாய்மார்கள் ஆகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மகப்பேறு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் என் கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்து இருக்கிறது. யுதிஷ்டிரனாகிய நான் மற்றும் பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும். ஒரு தாய்க்கு மகன் இல்லாது போகும்படி நான் நடந்து கொள்வது தர்மம் இல்லை ஆகவே நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன் என்றார் யுதிஷ்டிரர்.

நீ பரந்த மனப்பான்மை படைத்தவன் உன்னை போன்றவனை காண்பது அரிதிலும் அரிது. ஆகவே 4 சகோதரர்களையும் நான் உனக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். உடனே நான்கு சகோதரர்களும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது போன்று எழுந்தார்கள். அவர்களை வாட்டிய பசி தாகம் களைப்பு ஆகியவை இப்போது ஓடிப் போயின. யுதிஷ்டிரர் அசரீரியை பார்த்து என்னுடைய சகோதரர்களை தேவர்களாலும் வெல்ல முடியாது. அத்தகைய வீரர்களை மயக்கத்தில் விழவும் மறுபடியும் எழுந்திருக்கவும் செய்திருக்கிறாய். அத்தகைய நீ யார் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். யுதிஷ்டிரர் முன்பு பிரகாசத்துடன் மூர்த்தி ஒன்று தோன்றி நான் தர்மதேவதை உனக்கு நான் தெய்வீக தந்தையாவேன். உன்னுடைய உறுதிப்பாட்டை சோதித்தல் பொருட்டு இப்பொழுது நிகழ்ந்தவை யாவற்றையும் நான் வேண்டுமென்றே செய்தேன். உன்னிடத்தில் எனக்கு பரம திருப்தி உண்டாகியது நீ வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்வாயாக என்று தர்ம தேவதை கூறினார். தந்தையை பிராமணன் மானிடம் இழந்த அரணிக்கட்டையை திருப்பித்தர கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையேல் தர்மத்திலிருந்து நாங்கள் பிசகியவர்கள் ஆவோம். ஆகவே அரணிக்கட்டை மீண்டும் கிடைக்க தயை கூர்ந்து அதற்கு அருள்புரிவீர்களாக என்றான். அதற்கு தர்மதேவதை தானே மான் வடிவில் வந்து அரணிக்கட்டையை தூக்கி சென்றோம் என்று கூறி திருப்பி அளித்தார். மகிழ்ச்சியுடன் அரணிக்கட்டையை பெற்றுக்கொண்டார் யுதிஷ்டிரர்.