மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 13
பாண்டவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த கிருஷ்ணன் தன்னுடைய துணைவியான சத்தியபாமாவையும் அழைத்துக்கொண்டு பாண்டவர்களை பார்க்க வந்தான். இந்த சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. வனவாசத்தில் நடந்த அனுபவங்களை பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் தெரிவித்தார்கள். நகரில் இருக்கும் உப பாண்டவர்கள் அபிமன்யூ சுபத்திரை ஆகியோருடைய நலனை கிருஷ்ணர் பாண்டவர்களிடமும் தெரிவித்தார். அர்ஜூனன் தனக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த ஆயுதங்கள் தேவலோகத்து அனுபவங்கள் அனைத்தையும் கிருஷ்ணனிடம் தெரிவித்தான்.

சிரஞ்சிவியாகிய மார்கண்டேய மகரிஷி காம்யக வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து நாரதமகரிஷியும் அங்கு வந்தார். மகாபுருஷர்களின் வருகையால் அந்த இடத்தில் தெய்வீகம் மேலோங்கியது. பக்தியை வளர்க்கும் கதைகள் கருத்துக்களை மார்க்கண்டேய மகரிஷி சிறப்பாக கூறினார். அவரிடம் இருந்த தெய்வீக ஆற்றலை பாண்டவர்கள் வேண்டியவாறு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் அங்கு இருந்ததில் காலம் வெகு விரைவாக சென்றது. கிருஷ்ணனும் மார்கண்டேய மகரிஷியும் விரைவில் உங்களுக்கு நல்லகாலம் வரும் என்றும் ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

வேதங்களை கற்றறிந்த தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்த யாத்திரை செய்யும் பிராமணன் ஒருவன் திருதராஷ்டிரரை அவருடைய மண்டபத்தில் சந்தித்தான். பாண்டவர்களை காம்யக வனத்தில் சந்தித்ததையும் அவர்களுடைய விவரங்களையும் திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தான். கௌரவர்கள் அனைவரும் அவர் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். ஏனெனில் வஞ்சகமாக சூதாடி வனத்துக்கு விரட்டப்பட்ட பாண்டவர்களின் நிலைமையை அறிந்து கொண்டால் மேலும் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படும். திருதராஷ்டிரர் பாண்டவர்களின் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தான்.

பாண்டவர்களில் முத்தவனான யுதிஷ்டிரன் இப்போது மண்ணுலகிற்கு மட்டும் அல்லாமல் விண்ணுலகிற்கும் பயன்படுகின்ற ஏராளமான தபோபலன்களை பெற்றிருக்கின்றான். பீமன் அனுமனிடம் இருந்து புதிய உடல் திட்பத்தையும் வல்லமையையும் பெற்றிருக்கின்றான். அர்ஜுனன் தன்னுடைய தவத்தின் விளைவாக மகாதேவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை சிவ பிரசாதமாகப் பெற்று இருக்கின்றான். இந்திரன் அர்ஜுனனை இந்திர லோகத்திற்கு அழைத்துச் சென்று ஒப்புயர்வற்ற அஸ்திரங்களை வழங்கியிருக்கின்றான். நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர்கள் தங்களுடைய தவத்தின் விளைவாக திண்ணிய மனப்பான்மை படைத்தவர்களாக மேலோங்கி இருக்கின்றார்கள்.