மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 5
பீஷ்மரை எதிர்த்து பீமன் போரிடத் தொடங்கினான். பீமனனுடன் சாத்யகியும் அபிமன்யுவும் பீஷ்மரை சேர்ந்து தாக்கினார்கள். இதைக் கண்ட துரியோதனன் பல வீரர்களை ஒன்று திரட்டி பீஷ்மருக்கு துணையாக அனுப்பினான். பீஷ்மருக்கு துணையாக இருந்த வீரர்கள் அனைவரும் பீமனையும் அபிமன்யுவையும் வளைத்துக் கொண்டார்கள். பீமனும் அபிமன்யுவும் ஆபத்தில் இருப்பதை அறிந்த அர்ஜூனன் அவர்களுக்கு உதவுவதற்காக வில்லோடு வந்தான். திடீரென்று அர்ஜூனன் வந்ததும் பீஷ்மரை சுற்றியுள்ள அவரது படைகள் நிலை தடுமாறி போயின. அர்ஜூனன் விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.

சாத்யகி பீஷ்மருடைய சாரதியை வெட்டித் தள்ளினான். அதன் விளைவாக பீஷ்மர் ஊர்ந்து சென்ற ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகள் போர்க்களத்திலிருந்து நெடுந்தூரத்திற்கு இழுத்துச் சென்றன. ஆகையால் அர்ஜுனனுக்கு தடையை ஏற்படுத்த யாருமில்லை. அவன் தன் விருப்பப்படி கௌரவப் படைகளை அழித்துத்தள்ளினான். கௌரவ சேனைகளுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. அதற்கிடையில் சூரியனும் அஸ்தமித்தது. இரண்டாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாள் போரில் அதிகமான நஷ்டம் தன் பக்கம்தான் என்று உணர்ந்த துரியோதனன் வருத்தம் அடைந்தான்.

இரண்டாம் நாள் போராட்டத்தில் கௌரவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு பண்ண பீஷ்மர் உறுதி பூண்டார் அதற்கு அவர் கௌரவர்களுடைய சேனையை கருட வியூகத்தை அமைத்தார். பார்ப்பதற்கு கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருந்தது. அந்த வியூகத்தில் ஆங்காங்கு பொருத்தமான இடங்களில் பெரிய பெரிய போர் வீரர்களை இடம் பெறச்செய்தார். அந்த வியூகத்தின் தலை ஸ்தானத்தில் பீஷ்மர் தாமே இடம் வகித்தார்.

கருட வியூகத்தின் வல்லமையை சிதறடிக்கச் செய்ய பாண்டவ சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் தன்னுடைய படைகளை சந்திர வியூகத்தில் அமைத்தான். அதன் இரண்டு முனைகளிலும் பீமனும் அர்ஜுனனும் இடம் பெற்றார்கள். பயங்கரமாக போர் துவங்கியது சாத்யகியும் அபிமன்யுவும் ஒன்றுகூடி சகுனியின் படைகளை அழித்து தள்ளினார்கள். பீஷ்மரும் துரோணரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனும் அவனுடைய ராட்சச மைந்தன் கடோத்கஜனும் ஒன்று சேர்ந்து துரியோதனனுடைய சேனையை எதிர்த்தார்கள். பீமனை விட கடோத்கஜன் பன்மடங்கு அதிகமாக எதிரியின் படைகளை அழித்து தள்ளினான்.

பீமன் எய்த அம்பு ஒன்று துரியோதனனை தாக்கியது. துரியோதனன் மேல் பாய்ந்த அம்புகள் அவனது கவசத்தை பிளந்து அவன் மார்பை துளைத்தது. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் தேர்த்தட்டில் மயக்கமடைந்து விழுந்தான். அபிமன்யு துரியோதனனின் தேரோட்டியை அம்புகள் எய்து கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தான். அந்நிகழ்ச்சி கௌரவ சேனையில் குழப்பத்தை உண்டு பண்ணாமல் இருக்க துரியோதனன் அங்கிருந்து விரைவாக அப்புறப்படுத்தப்பட்டான். துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி பீஷ்மருக்கு படைவீரர்கள் தெரிவித்தனர். பீஷ்மர் உடனே துரியோதனனின் உடலைத் தனியாக தேரின் மேல் வைத்து போர்க்களத்தின் ஓரமாக கொண்டு வந்து சிகிச்சை அளித்து துரியோதனனுக்கு சுய நினைவை வரவழைத்தார்.