மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 4
முதல் நாள் நடந்த யுத்தத்தில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை கொண்டு இரண்டாம் நாள் பாண்டவர்கள் தங்கள் படைகளை அதற்கு ஏற்றார் போல் திருத்தி அமைத்தார்கள். இரண்டாம் நாள் யுத்தம் துவங்கியது. திருஷ்டத்யும்னன் தலைமை சேனாதிபதியாக இருந்து கண்ணனுடைய ஆலோசனையின்படி தங்களுடைய படைகளை கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் ஒரு பறவை போன்று தென்பட்டது. கிரௌஞ்ச வியூகத்திற்கு துருபத மன்னன் தலையாக நின்றான். யுதிஷ்டிரர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும் பீமனும் சிறகுகளாக இருந்தனர். பண்டை காலங்களில் வியூகம் அமைப்பது ஓர் அலாதியான கலையாக இருந்தது. கிரௌஞ்ச வியூகத்துக்கு பொருத்தமான எதிர்ப்பு வியூகத்தை கௌரவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

யுத்தத்தில் பீஷ்மர் மிகச்சுலபமாக பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகத்தில் பிளவை உண்டு பண்ணி உள்ளே நுழைந்து பாண்டவர்களை பெருவாரியாக அழித்து தள்ளினார். கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜுனன் தன் பாட்டனார் பீஷ்மர் மீது பாய்ந்து தாக்கினான். பீஷ்மருக்கும் அர்ஜூனனுக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தம் பயங்கரமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் நெடுநேரம் நிகழ்ந்தது

மற்றோரிடத்தில் துரோணரும் திருஷ்டத்யும்னனும் பயங்கரமாக போர் புரிந்தனர். மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையை எடுத்து திருஷ்டத்யுன்மனின் அழிவுக்காக அவன் மீது குறி பார்த்தார் துரோணர். குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் ஓ என்னும் ஓலங்கள் எழுந்தன. வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்று நின்றான். மரணம் வருவதைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும் பயங்கரமான சுடர்விடும் அந்தக் கணையை திருஷ்டத்யும்னன் வெட்டினான். இச்சாதனையைச் செய்த திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அப்போது மகிழ்ச்சியால் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். திருஷ்டத்யும்னன் சக்தி வாய்ந்த ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற துரோணர் தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்து சிஷ்யனுக்கு மேம்பட்டவர் என்பதை நிரூபித்து திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்து அம்புகளால் துளைத்து விட்டார். இதனால் படுகாயமடைந்த திருஷ்டத்துய்மனை பீமன் போர்க்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல முற்பட்டான்.

பீமன் திருஷ்டத்துய்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்ட கலிங்க வேந்தன் எதிர்ப்பக்கத்தில் பீமனை எதிர்ப்பதற்காக வந்தான். கலிங்க வேந்தனின் படையில் யானைகள் அதிகமாக காணப்பட்டது. மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் பீமனுக்கு அதிக மகிழ்ச்சி. பீமன் கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான். கலிங்க வேந்தன் பின் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணி தன்னுடைய யானைகளுடன் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்ததால் தோல்வியடைந்து விட்டேன் என்று கூறி ஓடினான். கலிங்கன் ஓடியதை பார்த்த பீஷ்மர் கலிங்க படைக்கு உதவி புரிய அங்கு வந்தார்.