மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 15
பதினைந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தம் பார்ப்பதற்கு பயங்கரமாக காட்சி அளித்தது. அர்ஜுனன் தான் பெற்றிருந்த திறமைகள் அனைத்தையும் துரோணரிடம் பயன்படுத்தினான். நெடுநேரம் இருவரும் தீவிரமாக போர் புரிந்தனர் பிறகு ஏனைய போர் வீரர்களைத் தாக்கும் பொருட்டு குருவும் சிஷ்யனும் பிரிந்து போனார்கள்

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் துரோணர் மீதும் கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். எப்படியும் துரியோதனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை தீர்கமாக முடிவெடுத்திருந்தார் துரோணர். அசாத்தியமான தன் ஆற்றலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். பாண்டவ சகோதரர்கள் மற்றும் அவர்களது படை தளபதி திருஷ்டத்யும்னன் தவிர மற்ற அனைவரும் அவரின் தாக்குதலை கண்டு கலங்கினர். அவர் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தடைகள் இல்லாமல் காற்றை கிழித்துக்கொண்டு இலக்குகளை தாக்கின. ஒரே விசையில் ஏழு அம்புகளை செலுத்தும் தன் ஆற்றலால் பண்டவ படைகளை மிரள வைத்தார். அனைவரும் துரோணரிடம் கடுமையாய் போராடி கொண்டிருந்தனர்.

மற்றொரு திசையில் கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரை துரியோதனனின் பக்கம் கொண்டு சென்றார். துரியோதனனுக்கு துணையாக கர்ணன் சகுனி மற்றும் தம்பி துஷாசணன் இருந்தனர். நான்கு பெயரையும் எதிர்த்தான் அர்ஜுனன். அம்பு மழை பொழிந்தான். அம்புகள் விண்ணை மறைத்தது அர்ஜுனனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் நகர்ந்தனர். கர்ணன் மட்டும் அர்ஜுனா நீயும் நானும் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டது. தயாராக இரு என்று எச்சரித்து விட்டு சென்றான். அர்ஜூனன் சென்று வா கர்ணா என்று மறுமொழி கூறினான்.

மறுமுனையில் துரோணர் தன் அக்னி அஸ்திரங்களை கொண்டு அனைவரையும் எரித்து சாம்பலாக்கி கொண்டிருந்தார். கோபமுற்று அவரை தடுக்கும் முயற்சியில் இறங்கினார் துருபர். கடும் போருக்கு பின் துரோணரை தாக்கு பிடிக்க முடியாமல் அவரின் அம்பை மார்பில் தாங்கி தன் தேரில் சரிந்தார் துருபர். திரௌபதியின் தந்தையும் பாண்ட படைகளின் தளபதியான திருட்டத்துயும்னனின் தந்தையுமான துருபதன் குருக்ஷேத்ரத்தில் தனது பங்கை முடித்து கொண்டு மடிந்தார். பாண்டவ படைகளை சிதறடித்து கொண்டிருந்த துரோணரை நோக்கி தன் தேரை செலுத்தினான் அர்ஜுனன். துரோணரை மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்தான் அர்ஜுனன். அம்புகள் பாய்ந்தன. அஸ்திரங்கள் சீறியது. வில்லின் நாணொளி போர் முழக்கத்தை விட பெரியதாக இருந்தது. இருவரும் சமமாக போர் செய்தனர். நீண்ட நேர போருக்கு பின் துரோணர் அர்ஜூனனிடம் இருந்து பின் வாங்கினார். துரோணரின் போர் உக்கிரம் தற்காலிகமாக சற்று குறைந்தது.