பக்த சோகாமேளர் | SANT CHOKHAMELA
பண்டரிபுர எல்லையில், பஞ்சம மரபினர் எனும் எளிய குடிசைவாழ் மக்களின் மரபில் தோன்றிய பக்தர் ஸ்ரீசோகாமேளர்.

எவ்வித சுய ஒழுக்கமுமின்றி மது; மாமிசம்; வாயிலாப் பிராணிகளைப் பலியிடுவது என்று வாழ்ந்து வரும் அப்பகுதி குடிசைவாசிகளைத் தம்முடைய தொடர் போதனைகளால் பாண்டுரங்க பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆட்படுத்தி வந்தார் சோகாமேளர்.

அனுதினமும் வைகறைப் பொழுதில் துயிலெழுந்து பீமா நதியில் நீராடி, திருமண் தரித்துக் கொள்வார், பண்டரிபுர ஆலய எல்லையில் நின்ற வண்ணமே பாண்டுரங்கப் பெருமானை வணங்கி மகிழ்வார். இது பொறுக்காத அப்பகுதி உயர்குல மக்கள் அவரைக் கடுமையாய் நிந்தித்து இப்பகுதியில் இனியும் கால் பதிக்காதே என்று தூற்றினார்கள். அதனால் சோகாமேளர் பீமா நதியின் மறுகரைக்குத் தன் மனைவியுடன் குடிபெயர்ந்து வாழத் தொடங்கினார்.

ஒருநாள் பகவான் பாண்டுரங்கன் சோகாமேளருக்கு அவரது குடிசையில் திருக்காட்சி தந்து அருள் புரிந்து அவரைத் தன்னுடைய ஆலயக் கருவறைக்கு அழைத்துச் சென்றுத் திருவுருவம் மறைகின்றார்.

பண்டரிநாதரின் விக்கிரகத் திருமேனியையும் தரிசிக்கப் பெறும் சோகாமேளர் கண்ணீர் பெருக்கி அகம் குழைந்து ‘கருணைக் கடலே! பண்டரிநாதா! எளியேனின் பொருட்டு இத்தனை கருணையா பிரபு?!’ என்று அன்றைய இரவுப் பொழுது முழுவதுமே கருவறையில் ஏகாந்தமாய் ஆடிப் பாடித் தொழுகின்றார்.
அது மட்டுமா! ஒரு சமயம் சோகாமேளரும் அவரின் திருத்துணைவியாரும் ஏகாதேசியன்று நல்விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்துப் பாண்டுரங்கப் பெருமானை வழிபடுகின்றனர்.

மறுநாள் துவாதசி, சோகாமேளரின் மனைவியார் விரத நிறைவிற்கான பாரணை உணவினைத் தயாரிக்கச் செல்கின்றார்,

அச்சமயம் வாயிலில் கோடி சூரியப் பிரகாசராய்ப் பகவான் பண்டரிநாதர் தோன்றி ‘அன்பனே! நாம் இங்கு துவாதசிப் பாரணைக்காக எழுந்தருளி வந்தோம்’ என்று அருள் புரிந்து, அப்பெருமக்களின் உணவினை உண்டு ‘உங்கள் சுவையான உணவினால் அகமிக மகிழ்ந்தோம்”

இனி ஒவ்வொரு துவாதசிக்கும் உங்கள் இல்லத்தில் நேரில் எழுந்தருளிப் பாரணை உணவினை ஏற்போம்’ என்றொரு அமுத மொழி பகர்கின்றார். இறைவன் முன் உயர்வு தாழ்வு என்ற பேதம் கிடையாது. எளியோர்க்கு எளியோன் பக்த பாண்டுரெங்கன் அன்றோ…..

பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் …!
விட்டல விட்டல ஜெய் ஹரி விட்டல
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல
பண்டரிநாத விட்டல

ர்வம் கிருஷ்ணார்ப்பணம்