மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை | பாசுர விளக்கம்
நாளை என்பதே நரசிம்மரிடம் கிடையாது என்பார்கள். நரசிம்ம அவதாரம் பிரகலாதன் என்கிற மாபெரும் பக்தனின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தது. பக்தனின் பரிபூரண நம்பிக்கைக்கு அவனுடைய சரணாகதி தத்துவத்திற்கு இலக்கணமாய் அமைந்தவர் நரசிம்மர்.

மலைமீது உள்ள சோளிங்கரில் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருநாமம் என்ன தெரியுமா? அக்காரக்கனி இதைவிட தூய தமிழ்ப் பெயரை நாம் வேறு எங்காவது பார்க்க முடியுமா? இந்த அக்காரக்கனி என்ற பெயர் வரும் வரையில், தித்திக்கும் தேன் தமிழில் திருமங்கையாழ்வார் அற்புதப் பாசுரத்தை படைத்திருக்கிறார்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொல்கின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

என்று பாடுகிறார். பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது.

கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து கொஞ்சி பேசுகிறார், திருமங்கையாழ்வார். பெருமாளின் பெருமையை நினைத்ததும், யாரும் சமமில்லாத, எல்லாருக்கும் மேற்பட்டவனே ! (மிக்கானை) என்று ரசிக்கிறார்.

மேலும், அழியாத வேத விளக்காக இருக்கிறார் (மறையாய் விரிந்த விளக்கை) என்றும் ரசிக்கிறார். அப்படிப்பட்ட பெருமைமிக்க பெருமாள், தன் ஆத்மாவாகவும் இருக்கிறாரே என்றதும், உடனே, எனக்கு அந்தர்யாமியாக இருப்பவனே ! (என்னுள் புக்கானை) என்று ரசிக்கிறார்.

உடல் ரீதியாக பார்த்தால், பெருமாளும் நாமும் ஒன்றாகி விட முடியாது.. ஆனால், 'ஆத்மா' என்று பார்க்கும் போது, நாமும் (ஜீவனும்), பெருமாளும் (பரமாத்மாவும்) ஞான ஸ்வரூபம் தானே.. வேதமும் ஜீவனையும், பரமாத்மாவையும் நண்பர்கள் என்று இரு கிளியை காட்டி சொல்வது ஞாபகம் வர, திருமங்கையாழ்வார், பெருமாளும், தானும் நண்பன் என்று வேதமே சொல்வதால், சமமானவன் (தக்கானை) என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்.

மேலும் வாக்குக்கு அப்பாற்பட்ட பெருமாளை! தெவிட்டாத இன்பமாக இருக்கும் பெருமாளை! எப்படி கொஞ்சுவது? என்று ஒரு பக்கம் திகைத்து, கொஞ்சவும் ஆசை ஏற்பட்டதால், உலகத்தில் கிடைக்கும் தித்திப்பான அக்கார வடிசில் (அக்காரமே!), கனியே! என்று ஆசை தீர கொஞ்சுகிறார்.

அது சரி அக்காரக்கனி என்றால் என்ன?

இனிப்பே உருவானவன். சுவைமிக்க கனியே இங்குள்ள இறைவன். ஆனந்தத்தின் உச்சம், மகிழ்ச்சியின் எல்லை, நம் சிந்தனை முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவன். திகட்டாத சர்க்கரைப் பொங்கல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கே இருக்கிற யோக நரசிம்மரும் உற்சவப் பெருமாளான பக்தவத்சல பெருமாளும் அதாவது இவரை தக்கான் என்று சொல்கிறார்கள். சோளிங்கபுரம் என்ற ஊரின் இயற்கை எழிலை அப்படியே பாசுரத்தில் வடித்து எடுத்து இருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இப்படி திருமங்கையாழ்வார், கடிகாசலம் (சோளிங்கர்) பெருமாளை பார்த்து "தக்கானை" என்றும், "அக்கார கனி" என்றும் அழைத்ததே, பெருமாளுக்கு பெயரும் ஆனது. இங்கு தாயார் திருநாமம் சுதாவல்லி நாச்சியார் என்ற அம்ருதவல்லி. பெருமாள் பெயரால் 'தக்கான் குளம்' எனற தீர்த்தம் உள்ளது.