திருமாலின் நான்கு குணங்கள்
திருமாலின் பெருமைக்குரிய குணங்களாக 4 விஷயங்களைச் சொல்கிறார்கள். அவை, வாத்சல்யம், சுவாமித்துவம், சவுசீல்யம், சவுலப்யம் ஆகியவையாகும்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணரின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற முடியாது. அதை நம்மாழ்வாரே மிக அழகாக ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்கிறார். ‘நாராயணருடைய உயர்வின் முன்பாக, மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர்’ என்று பெருமைபடுத்துகிறார்.

இருப்பினும் நாராயணரின் பெருமைக்குரிய குணங்களாக 4 விஷயங்களைச் சொல்கிறார்கள்.

குணநலன்கள்
வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
சுவாமித்துவம் – கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
சௌசீல்யம் – ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
சௌலப்யம் – கடவுளின் எளிமையை குறிப்பது.

1.வாத்சல்யம்

இது கன்றிடம் தாய்ப்பசு கொண்டிருக்கிற அன்பு போன்றது. இந்த குணமானது, திருமாலின் அவதாரங்களில் முக்கியமானதாக கருதப்படும் கிருஷ்ண அவதாரத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. பாண்டவர்கள், அவர்களின் மனைவி திரவுபதி, தன் பால்ய நண்பன் குசேலர் ஆகியோரிடம் அப்படி ஒரு அபரிமிதமான அன்பை அவர் வெளிப்படுத்தினார். பாண்டவர்களிலும் கூட அர்ச்சுனனிடம் அவர் காட்டியது இன்னும் மேலான அன்பு. போர்க்களத்தில் அவன் குற்ற உணர்ச்சியில் தவித்தபோது, அது குற்றமல்ல என்பதையும், உண்மையான பொருளின் சிறப்பையின் உணர்த்தியவர், கிருஷ்ணர். அதுவே ‘வாத்சல்யம்’ எனப்படுகிறது.

2.சுவாமித்துவம்

கடவுளர்களுக்கு எல்லாம் தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவதே ‘சுவாமித்துவம்.’ இது திருமாலின் அனைத்து அவதாரங்களிலும் வெளிப்படவே செய்தது என்றாலும், கிருஷ்ண அவதாரம் அந்தச் சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணன் உபதேசித்தபோது, தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டு, அதை விளக்கியதன் அடிப்படையில் இந்த குணத்தை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

3. சௌசீல்யம்

ஏற்றத் தாழ்வின்றி, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி அமைந்த நட்பைக் குறிப்பது, ‘சௌசீல்யம்.’ இந்த குணமும் திருமாலின் அவதாரங்களில் கண்ணனிடம் அதிகமாக வெளிப்பட்டது.

4. சௌலப்யம்

இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது ‘சௌலப்யம்.’ உலக மாயைக்கு கட்டுப்படாத திருமால், மனித உருவம் எடுத்து பூமிக்கு வந்து, தனது உடலை உலக மக்களுக்கு காண்பித்தருளிய நிலையை, இந்த எளிமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.